பூகோளம் என்று ஒரு கிராமம்.
அதில் மடயர் என்று ஒரு இனம் வாழ்ந்து வந்தது.
வெறுப்பு உணர்வை வாழ்வாதாரமாக வைத்து இயங்கி வந்தது.
அவினத்தில் வெறுப்பு உமிழ தெரியாத மூளையை கொண்ட ஒரு ஊனமுற்ற குழந்தை பிறந்தது .
குழந்தை வளர வளர அது ஒரு வினோதத்தை கண்டது.
மடயர் அனைவரும் ஒரே இனம் ஆயினும் அவர்கள் மூன்று பெரும் மதங்களாகவும் மூவாயிரத்தெட்டு உட்பிரிவுகளாகவும் பிரிந்தவர்கள் போல் ஒரு மாயையில் வாழ்ந்துகொண்டிருந்தனர்.
மதங்கள் உருவான சங்கதியை நூலக பரணில் தூசி தட்டி ஒரு புத்தகத்தில் படித்து தெரிந்து கொண்டது அந்த குழந்தை .
'கேச' மதத்தின் வரலாறு
ஆதி கால மடயர் இனத்தவர் அனைவரும் சுருள் முடி கொண்டவர்களாக இருந்தனர் .
கொஞ்சம் முன் மூளை வளர்ந்த ஒரு அறிங்கன் சிரத்தை எடுத்து தன் சிர முடியை நேராக்கி தன் தோல் வரை படர விட்டான்
அவனுக்கு விசிறிகள் விரிந்தனர். அனைவரையும் தன் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று ஒரு நூதன முறையை கையாண்டான்.
மிகவும் நீண்ட கேசம் கொண்ட ஒரு சிலையை செய்தான். இவர்தான் இறைவன் என்றும், வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று ஒரு கையேடு தன்னிடம் ரகசியமாக கொடுத்திருப்பதாகவும் கூறினான். அதன் மூலம் அனைவரையும் பதப்படுத்தலாம் என்று பகல் கனவு கண்டான்.
அவன் இறந்து சில சந்ததி கடந்து தன் மீசை மீது ஆசை வைத்த ஒரு சிற்பி அந்த சிலைக்கும் மீசை வைத்து அழகு பார்த்தான்.
இன்னும் சில சந்ததி கடந்து மீசை வைத்த மற்றும் வைக்காத சிலை ஒரே சிலை என்று அறியாது அது 'மாமனும் மச்சானும்' என்று நினைத்து கொண்டது .
சில ஆண்டுகளில் 'கேச' மதம் , மீசை மாமனை வழிபடும் 'மீசைவம்' என்ற இனமாகவும், 'கேசம்' மட்டும் கொண்ட மச்சானை வழிபடும் 'கேசைவம்' என்ற இனமாகவும் பிளவுபட்டு ... மாற்றி மாற்றி வெட்ட பட்டு மற்றும் குத்த பட்டு வந்தனர்
'மொட்டை' மதத்தின் வரலாறு
அனைவரும் அடித்துகொள்வதை காண சகிக்காது அடயாளங்கள் அற்று அனைவரும் ஓர் இனம் என்று குறிக்கும் வண்ணம் தன் முடி அனைத்தையும் மழித்து கொண்டு வலம் வந்தான் ஒரு ஞானி .
அவன் பின் ஒரு மொட்டை கூட்டம் கூடியது.
பொறுக்க முடியாத 'கேச' மதத்தினர் ஞானிக்கு திருட்டு பட்டம் கட்டி , பெரிய பாறையை முதுகில் ஏற்றி கடற்கரை வரை ஊர் பார்க்க நடக்க விட்டு , கப்பல் ஏற்றி நடு கடலில் பாறையை ஞானியுடன் சேர்த்து இரும்பு சங்கிலியால் பிணைத்து, நைய்ய புடைத்து, ரத்தம் சொட்ட சொட்ட, சுறா மிகுந்த நடுக்கடலில் தள்ளி விட்டனர்.
பாறையில் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்ட ஞாநியின் உருவத்தை கோவில்களில் வைத்து வழிபட ஆரம்பித்தது 'மொட்டை' மதம்.
பிறகு 'பாறை'யை மட்டும் வணங்குவோர் (பாறை கோஷ்டி ) ஓர் புறமும், இரும்பு சங்கிலியை வணங்குவோர் ( சங்கிலி கோஷ்டி ) மறுபுறமுமாய் பிரிந்து 'மொட்டை' மதம் 'ரெட்டை' மதம் ஆனது .
'முண்டாசு' மதத்தின் வரலாறு
உருவங்களை வழிபடும் வரை கோஷ்டி உருவாவதை தவிர்க்க முடியாது என்று அறிந்த ஒரு அறிவாளி 'அரூப' கடவுளை அனுஷ்டித்தான் . கடவுள் சித்தமாகவே இருந்தால் தமக்குள் சண்டையிடுவது குறையும் என்ற நோக்கத்தில் ஒரு நாளில் ஏழு முறை கடவுளை வணங்கும் சில சாங்கியத்தையும் ஏற்படுத்தினான்.
வெயிலில் பிராயணபட்டு பல இடங்களில் போதனை செய்த அவன் , வெயிலில் இருந்து தன்னை காத்து கொள்ள முண்டாசு கட்டி கொண்டான்.
'முண்டாசு' மதம் பிறந்தது .
பின் வந்த சந்ததி வியர்த்ததால் முண்டாசை கழற்றியவர்களை முற்சந்தியில் வைத்து அடித்தது . ஏழு முறைக்கு பதிலாக ஆறு முறை கடவுளை வணங்கியவர்களை மத எதிரிகளாக அறிவித்து தலை கீழாக தொங்க விட்டது .
முண்டாசில்லாத பிற மத மண்டைகளை அதனால் சகித்து கொள்ள முடியவில்லை .
குழந்தை நூலகத்தை விட்டு வெளியே கற்று உணர்தவனாக வந்தான் .
தன்னை 'மதமற்றவன்' என்று பிரகடனம் செய்து கொண்டான்.
'மொட்டை' அடித்து முண்டாசு கட்டி பெரிய மீசையை வைத்து கொண்டான். கடவுள்கள் வேண்டாம் என்றான். மதங்கள் வேண்டாம் என்றான். அன்போடு பூலோகத்தை அனுபவிப்போம் என்றான் . அவன் பேச்சில் மயங்கி பெரும் கூட்டம் சேர்ந்தது .
அவ்வாறாக சேர்ந்த ஒரு பெரும் கூட்டதில் வெடித்த குண்டில் பலியானான் 'மதமற்றவன்'.
அவன் அனுதாபிகள், கடவுளை நம்புவோர்களை கேலி செய்தனர் , சிலைகளை பதம் பார்த்தனர், கோயில்களை 'மூடர் கூடம்' என்று சொல்லி இடித்தனர் .
'மதமற்றவனின்' மதம் என்று ஒன்றை உருவாக்கினர்.