Saturday, 3 August 2013

காதல் கோடு

ஒரு எண்பது பக்க கோடு  போட்ட நோட்டு .

பக்கங்களை அவள் புரட்ட புரட்ட, நெஞ்சத்தில் ரணம் புரண்டது.  

ஒவ்வொரு பக்கத்திலும் அவன் எழுதிய கவிதைகள்.

' முதல் பக்கத்தில் உன் பெயர் எழுது . ' - அவன்.

எழுதினாள்

அவள் பெயருக்கு  கீழே எழுதினான் .

' இனி
 மற்ற கவிதைகள்  | '

அன்று  வழக்கமானது என்று புறம் தள்ளிய கவிதை இன்று ஏதோ செய்தது .

"உன் கோவில்
கருவிழி குளத்தில்
குளித்து கழிக்க
பாவங்கள் செய்பவன்
நான் | "

பாவம் என்று எதை சொன்னான் , இருள் அடர்ந்த கோவில் குளக் கரையில், யாருக்கும் தெரியாமல் உயர் ஜாதி பெண்ணாகிய எனக்கு, காமம் குறைந்த உயர் ஜாதி காதலையும் சில கவிதைகளையும் தந்தது பாவம் என்கிறானா .

" 'என்ன சாதி' என்றார்
சாதியில்லா சாதி என்றேன்
'நீ பைத்தியமா?' என்றார்
இல்லை
'நான் காதலன்.' என்றேன் | "

'ஊர் கூடி அடித்ததிற்கும் இப்படி கவிதை எழுதுபவனே என் காதலன் ' என்று நினைத்து கொண்டாள்.

" பெண்ணே ...
தாசி வீட்டில் புணரும்பொழுது
உணராத சாதி,
ஊர் கூடி மணக்கும் பொழுது
மணக்கிறதே | "

படித்தவுடன் கவிதையை அடித்து விட்டாள்  . " அசைவம் எனக்கு  பிடிக்காது " - என்றாள் .

" உண்மை எப்பொழுது அசைவம் ஆனது? " என்றான் .

உண்மைதான் , சாதி பெயரால் வயிர் வளர்க்கும் அவள்  அண்ணன் பற்றிய உண்மை கவிதை அது .

" மனிதனற்ற
அயல் சாதியை கண்டெடுக்க
அண்டம் தாண்டி செல்கிறது
நாசா விண்களன்
'அயல் சாதி' என்னை கண்டெடுத்து
கண்டம் ஆக்க
உயிர் நாச கருவிகளுடன்
தேடி அலைகிறது
 பரிணாம வளர்ச்சி அற்ற
 ஓர் ' உயர் சாதி ' | "

" ஏன் வந்தாய் . யாரும் பார்ப்பதற்குள் ஓடிவிடு !" என்று அவள் சொன்ன பொழுது அவள் நோட்டை பிடுங்கி சட்டென்று கிறுக்கி விட்டு சென்ற கவிதை அது .

அவன் இப்பொழுது இல்லை . மலை மீதிருந்து விழுந்து தற்கொலை செய்து  கொண்டானாம். சொல்கிறார்கள் பாவிகள் .

"ஊர் முன்னாடி அவனுக்காக அழுது நம் சாதியின் மானத்தை வாங்காதே " என்று அவளை ஒரு அறைக்குள் தள்ளி தாளிட்டனர்.

இறந்த பின்னும் எண்பது பக்கத்து நோட்டில் இருக்கும் அவனே துணை .

மீண்டும் மீண்டும் கவிதைகளை புரட்டும் பொழுதுதான் அவள் அதை கண்டாள்.

எல்லா கவிதைகள் முடியும் பொழுது ஒரு கோடு ஒன்று இருந்தது .' | '

ஏன் அந்த கோடு ... வியந்தாள்... கேட்க அவனில்லாததால் அழுதாள் .

அப்பொழுது திறந்திருந்த சன்னல் வழியே 'கல்'  ஒன்று விழுந்தது .

வெளியே எட்டி பார்த்தாள். அங்கே அவனின் நண்பன் ஒருவன் அவளை பார்த்து கை அசைத்து விட்டு ஓடி விட்டான் .

அந்த கல்லை சுற்றி ஒரு காகிதம் இருந்தது .

அதை பிரித்தாள்.
 
அதில் அவளின் 'அவனின் ' கையெழுத்து . நெகிழ்ந்தாள்.

அதில் எழுதி  இருந்தது

உன்னை பற்றி நான் சொல்ல விரும்பிய ஒரே கவிதை  

" | " 

" நீ ஒரு முற்று புள்ளி இல்லாத ஆச்சரிய குறி " 

அவள் வெடித்து அந்த காகிதத்தில் முகம் பொதித்து அழுதாள் .

சாதிகளுக்கு புரிபடாத காதல் ஒன்று கண்ணீரோடு சேர்ந்த கவிதையாய் வழிந்து கொண்டிருந்தது .

2 comments:

  1. hiiiii karthik

    its so difficult to understand that love is above all man created things...(religion/caste/money/name/fame.,.........)

    what to do only true souls like u and me can only understand this.....

    your !!!!!!!!!!!!!

    ReplyDelete
  2. @ Durga ... 'public' 'public' !? ( anyway you know you are my "|" )

    ReplyDelete